கொடைக்கானல்:கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று காலை முதலே இடைவிடாத சாரல் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மிதமான மழை, சாரல் பெய்து வருகிறது. நேற்று காலை முதலே கொடைக்கானலில் பனி மூட்டம் நிலவி, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுச்சென்றன.
காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியது. மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் சுற்றுலா பயணியர் வருகை குறைவாகவே இருந்தது. நகர்ப்பகுதி வெறிச்சோடியது.
சாரல் மழைக்கு நடுவே படகு சவாரி, குதிரை, சைக்கிள் சவாரி செய்து பயணியர் மகிழ்ந்தனர். மாலையில் கடும் சூறைக்காற்று வீசியதால் மலை கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.