கோத்தகிரி:கோத்தகிரியில் இருந்து முருக பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை சென்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் முருக பக்தர்கள், பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று முருகனை வழிப்பட்டு திரும்புகின்றனர். வரும், 5ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில், நேற்று கோத்தகிரியில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
கோத்தகிரி சக்கத்தா ஆண்டாள் பஜனைக்குழு சார்பில், நிர்வாகிகள், பெள்ளிராஜ் மற்றும் முருகன் ஆகியோர் தலைமையில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், காவி உடை அணிந்து, காவடி எடுத்து, பாதயாத்திரை புறப்பட்டனர். கிராம கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி சென்ற பக்தர்களுக்கு, கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள குஞ்சப்பனை மாரியம்மன் கோவிலில், அன்னதானம் வழங்கப்பட்டது.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, உபயதாரர்கள் மூலம், ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட உள்ளது. வரும், 7ம் தேதி, பழநி மலையேறி முருகனை வழிபடுகின்றனர். நேற்று நடந்த பாதயாத்திரை புறப்பாடு நிகழ்ச்சியில், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பக்தர்களை வழி அனுப்பி வைத்தனர்.