வேலுார்:வாலாஜாபேட்டை அருகே, தன் மீது அபாண்டமாக பழி சுமத்திய கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே, ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 45. கட்டட மேஸ்திரி. இவர் மனைவி கலைச்செல்வி, 38. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் இவர்கள் ஒழுகூரில் தனியாக வசித்து வந்தனர்.
ஏழுமலை தினமும் குடித்து விட்டு, வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து உதைத்து குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று ( 2) ம் தேதி இரவு 11:30 மணிக்கு குடித்து விட்டு வந்த ஏழுமலை மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். பணம் இல்லை என கலைச்செல்வி கூறினார்.அதற்கு உன் கள்ளக்காதலனிடம் பணம் கேட்டு வாங்கி வா என மனைவியிடம் ஏழுமலை கூறினார்.
வாக்கு வாதம் முற்றி மனைவியை கட்டையால் ஏழுமலை தாக்கினார். ஆத்திரமடைந்த கலைச்செல்வி, தன் மீது அபாண்டமாக பழி சுமத்திய கணவரை அங்கிருந்த கத்தியால் அவரது கழுத்தை பல முறை வெட்டினார். இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே ஏழுமலை இறந்தார். வாலாஜாபேட்டை போலீசார் கலைச்செல்வியை கைது செய்து வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.