- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தை மாதம் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி திப்பம்பட்டி பூங்கா நகர் சிவசக்தி கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. சிவபெருமானுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் மலையாண்டீஸ்வரர் அருள்பாலித்தார். சுவாமிக்கு கனி வகைகள் படைக்கப்பட்டன.
பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோவில், மாகாளியம்மன், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன், சுப்ரமணிய சுவாமி கோவில்களில், பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, தை மாதம் இரண்டாவது பிரதோஷ பூஜை, நேற்று மாலை, 5:30 மணிக்கு நடந்தது. பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது.
தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது. ரிஷப வாகனத்தில் சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* உடுமலை, தில்லைநகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நந்திபகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை அருகே, அமராவதிநகர் சித்தி விநாயகர் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சதாசிவ லிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். அமராவதி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டனர்.
பிரசன்ன விநாயகர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை பஞ்சலிங்க சுவாமி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.