கோவை:கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில், இந்தாண்டு, தைப்பூச திருவிழா, ஜன., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப்., 3 வரை தினமும் காலை, மாலைகளில் யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, கற்பக விருட்சம், அனந்தாசனம், கிருத்திகை, கேடயம், சந்திரபிரபை, ஆட்டுக்கிடாய், பூதவாகனங்களில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி திருவீதியுலா வந்தார்.
தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு, 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை, 4:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி, தங்க காசு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதன்பின், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியசுவாமி வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளினார். பின் மேஷ லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளினார்.
பகல், 12:20 மணிக்கு, 'அரோகரா' கோஷத்தின் இடையே, தைப்பூச தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், மருதமலையில் திரண்டனர். 575 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.