தேனி : பெண்கள், குழந்தைகள் நலனை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்துவதுடன், அரசு திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய முனைப்போடு செயல்படுவேன்.' என, தேனி புதிய கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்தார்.
தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கபபட்டார். இந்நிலையில் செங்கல்பட்டு சப்கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, மாவட்டத்தின் 18 வது கலெக்டராக நேற்று பொறுப்பேற்றார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். 29 ஆண்டுகளாக அரசுப்பணியில் உள்ளார். ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இதுதவிர மாவட்டத்தின் 2வது பெண் கலெக்டர் என்ற சிறப்பும் பெற்றுள்ளார். நேற்று பொறுப்பேற்ற பின் அவர் கூறியதாவது: சென்னையில் புதிய கலெக்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது. அதில் அவர் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். களத்தில் மக்களோடு மக்களாக நின்று பணியாற்ற வேண்டும். அரசுத் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் என தெரிவித்தார். அதன்படி அரசு திட்டங்களில் தகுதியான யாரும் விடுபடாத வகையில் அலுவலர்கள், பணியாளர்களுடன் இணைந்து முனைப்போடு செயல்படுவேன். பெண்கள், குழந்தைகள் நலனை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்துவேன். தேனி எனக்கு புதிய மாவட்டம் அல்ல. இதற்கு முன் இங்கு வந்துள்ளேன்., என்றார்.