கிருஷ்ணகிரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, ட்ரோன் கருவி பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. தற்போது மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி, சென்டர் பார் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மூலமாக, விவசாயத்துறையில் பயன்படுத்தும், 'ட்ரோன்' கருவி பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிர்களில் பூச்சி கொல்லி நோய் தாக்கப்பட்டால், குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில், 25 முதல், 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளிக்கலாம். இதன் மூலம் ஒரு நாளுக்கு, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
பயிற்சிக்கு, 18 முதல், 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களும், பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான காலம், 10 நாட்கள் ஆகும். பயிற்சிக்கான தொகை, 61 ஆயிரத்து 100 ரூபாய் தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகவோ, தாட்கோ நிதியுதவி மூலமே, 'ட்ரோன்' கருவிகளை வாங்கலாம். தகுதி உள்ளவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.comல் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.