ராயபுரம், ராயபுரம் காவல் குடியிருப்பில் வசித்தவர் லோகேஷ், 38; முதல் நிலைக் காவலர். இவருக்கு ஷாலினி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
கடந்த 2021 செப்டம்பர் மாதம் லோகேஷிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பல மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்தவர், 'பிளாக் மார்க்' செய்யப்பட்டு, பெரவள்ளூர் காவல் நிலையம் குற்றப்பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால், 'மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், மேலும் ரத்தக்கொதிப்பு பிரச்னை இருப்பதால் உடனடியாக பணியிட மாறுதலை ரத்து செய்து வடக்கு மண்டலத்தில் பணியிடம் ஒதுக்கி உத்தரவிட வேண்டும்' என டி.ஜி.பி.,க்கு லோகேஷின் மனைவி ஷாலினி மனு ஒன்று அளித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 5ம் தேதி இரவு வீட்டின் கழிப்பறையில் லோகேஷ் மயங்கி விழுந்து கிடந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்து, ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த நிலையில், லோகேஷ் இறப்பதற்கு முன் போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு பேசிய 'ஆடியோ' ஒன்று, நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் உதவி ஆணையர் சம்பத் பாலன் ஆகியோர், தொடர்ந்து லஞ்சம் வாங்கி வருவதாகவும், சமீபத்தில் 100 லிட்டர் டீசலை திருடி கொடுக்குமாறு ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் கூறியதை தான் மறுத்ததால், பழிவாங்கும் நோக்கில், தன்னை பணியிட மாற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும், ஒரு மாதத்திற்கு உதவி ஆணையர் 5 லட்சம் ரூபாயும், காவல் ஆய்வாளர் 1.5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும், 'இ - செலான் மிஷினில்' பல முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.
இதனால், மன உளைச்சலை ஏற்படுத்துவதால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு கண்ணீர் மல்க 'ஆடியோ'வில் பேசியுள்ளார்.
தற்போது, இந்த 'ஆடியோ' தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.