துாத்துக்குடி:தூத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் ஆலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுகளால் கோமஸ்புரம் உப்பாற்று ஓடை செந்நிறமாக ஓடுகிறது. ஆனால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
தூத்துக்குடி - மதுரை ரோட்டில் புதூர் பாண்டியாபுரம், கோமஸ்புரம் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட மீன் பதப்படுத்தும் ஆலைகள் உள்ளன. மீன்களை கழுவ, பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்துகின்றனர். அதிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் கோமஸ்புரம் உப்பாற்று ஓடையில் செந்நிறமாக ஓடுகிறது. கடந்த மாதம் ஒரு விழாவிற்கு வந்திருந்த கலெக்டர் செந்தில்ராஜ் ஓடை செந்நிறமாக மாறியிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து விசாரிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது: மீன் பதப்படுத்தும் ஆலைகளில் கழிவுநீரை சுத்திகரிக்கும் இயந்திரங்கள் இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் அதை கண்காணிப்பதில்லை. கலெக்டர் உத்தரவிட்ட பிறகும் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். நீர் மாசுபடுதல் தடுப்புச் சட்டம் 1974ன்படி கழிவுநீரை ஆற்றில் விடுவது குறித்து வழக்கு பதிவு செய்யலாம்.
இக்கழிவுநீர் செல்லும் ஓடையில் பல உப்பளங்கள் உள்ளன. அங்கு தயாரிக்கப்படும் உப்பு உணவுக்கு பயன்படுத்தும் போது பாதிப்பு ஏற்படுத்தும். கழிவுநீர் கடலில் கலந்தால் மீன்களுக்கும் விஷமாகும் என்றார்.
மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சத்யராஜ் பதிலளிக்க மறுத்தார். ஆனால் ஆலைக் கழிவுகளை ஓடையில் விட்டது தொடர்பாக நிலா சீ புட்ஸ், கிங் அகுவா, எஸ்.ஆர்.கே.,ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.