சென்னை: சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில், பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சி, வரும் 10ம் தேதி நடக்கிறது. இக்கண்காட்சியை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, புகைப்பட தொகுப்பு உடைய புத்தகத்தை வெளியிடுகிறார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால், சென்னையில் துவங்கப்பட்ட தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம், 160க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. இவர்கள் புயல், மழை, வெயில் பாராது, ஊண் உறக்கம் துறந்து உயிரைப் பணயம் வைத்து எடுத்த புகைப்படங்களில் சிறந்த படங்கள் தொகுக்கப்பட்டு, கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் பயணித்த புகைப்படக் கலைஞர்களின் படங்களும், இலங்கை பிரச்னை உள்ளிட்ட படங்களும் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒவ்வொரு படங்கள் சிறப்பாக வந்திருக்கும். அத்தகைய படங்களை, ஒரே இடத்தில் பெரிய அளவில் பார்க்கலாம் என்பதால், இது அறிய வாய்ப்பாக இருக்கும்.
இது போன்ற பத்திரிகையாளர்களின் புகைப்பட கண்காட்சி, தமிழகத்தில் நடப்பது இதுவே முதல் முறை. புகைப்பட ஆர்வலர்களும், பொதுமக்களும், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் இந்த கண்காட்சியை, ஒரு வாரகாலம், இலவசமாக காணலாம்.