திருச்சி:ரவுடியின் காதலியிடம், 'சில்மிஷத்தில்' ஈடுபட்ட, மேற்கு வங்க வாலிபரை கொலை செய்த பெண் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை முன் உள்ள ஹோட்டலில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிக்ரம், 34, வேலை பார்த்து வந்தார்.
கோட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி பாலா, 34, சந்துக்கடை பகுதியைச் சேர்ந்த கணேசன், 36, ஆகியோருடன் பிக்ரமுக்கு நட்பு ஏற்பட்டது. மூன்று பேரும் அடிக்கடி சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பாலாவின் காதலி தீபிகா, 27, என்பவரிடம், பிக்ரம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். அது குறித்து, தீபிகா பாலாவிடம் கூறினார்.
இதையடுத்து, பாலா, கணேசன், தீபிகா ஆகியோர், மது போதையில் இருந்த பிக்ரமை, நேற்று முன்தினம் இரவில் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்த கோட்டை போலீசார், கொலை நடந்த இடத்தின் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் வாயிலாக, பாலா, கணேசன், தீபிகா ஆகியோரை அடையாளம் கண்டு, நேற்று கைது செய்தனர்.