வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் முருங்கை மார்க்கெட்டுக்கு, 10 டன் முருங்கை வரத்து வந்த நிலையில் கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது.
தமிழகத்தில் கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை, செம்முருங்கை என நான்கு வகைகள் உள்ளன. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், முத்துார், காங்கேயம், புதுப்பை பகுதிகளில் செடிமுருங்கை, மரமுருங்கை ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
வெள்ளகோவிலில் உள்ள முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக்காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். மேலும் அருகில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கும் விவசாயிகள் முருங்கையை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
கடந்த வாரம், 20 டன் முருங்கை வரத்தான நிலையில் கிலோ, 35 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 10 டன் மட்டுமே வரத்தானது. மர முருங்கை கிலோ, 30 ரூபாய், செடி முருங்கை, 30 ரூபாய், கரும்பு முருங்கை, 40 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, நேற்று வரத்து குறைந்ததால் கிலோவுக்கு, ஐந்து ரூபாய் விலை அதிகரித்து விற்பனையானது.