கரூர்: கரூரில், பா.ம.க., முன்னாள்
எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் பின்புறம், நேற்று இரவு தீ விபத்து
ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர், காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் மலையப்பசாமி, 65; கபிலர் மலை தொகுதி, பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவருக்கு சொந்தமான, பெட்ரோல் பங்க், கரூர் - திருச்சி சாலை, சுங்ககேட்டில் உள்ளது. இந்த பெட்ரோல் பங்குக்கு பின்புறம், அமராவதி ஆற்றின், கரையோர பகுதிகளில் முளைத்திருந்த, சீமை கருவேல மரங்கள் சமீபத்தில் வெட்டப்பட்டன. காய்ந்த நிலையில் இருந்த, சீமை கருவேல மரங்களில் நேற்றிரவு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீ துகள்கள் பெட்ரோல் பங்குக்கு பரவின. இதனால், பெட்ரோல் பங்கில் இருந்த, ஊழியர்கள் அனைவரும் வெளியே ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று, சீமை கருவேல மரங்களில் பிடித்த தீயை அணைத்தனர். இதனால், அந்த பகுதியில், ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.