கரூர்: தொழில் நல்லுறவு சிறப்பு விருதுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், தொழில் நல்லுறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழக அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவை, பேணி பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள், தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.
இந்த விருதுக்கு, விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது கரூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து, சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம், வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.