நாமக்கல்,: 'வரும் காலங்களில், 'நெக்' மட்டுமே விலை அறிவிப்பு செய்ய வேண்டும். மற்ற அமைப்புகள் விலை அறிவிப்பு செய்ய வேண்டாம். மேலும், 'நெக்' விலை மற்றும் தினசரி விலை வரும், மே 1 முதல் அமல்படுத்தப்படும்' என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின், நாமக்கல் மண்டல துணைத்தலைவர் சிங்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில், 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம், தினமும், 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த முட்டைக்கு, தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு (நெக்), வாரத்தில், 3 நாட்கள் விலை நிர்ணயம் செய்து வருகிறது.
தற்போது செய்யப்படும் விலை நிர்ணயத்தில் பண்ணையாளர்களுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை. அதனால், மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு (நெக்), நேற்று பண்ணையாளர்களிடம் கருத்துகளை கேட்டறிய ஓட்டுப்பதிவை நடத்தியது. அதில், முட்டை விலை நிர்ணயம் தினசரியா, அல்லது தற்போது உள்ள நடைமுறையா என கேட்கப்பட்டது. அதற்கு, பெரும்பான்மையான பண்ணையாளர்களின் விருப்பமாக, தற்போதைய நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்பது பதிலாக கிடைத்தது.
அதேபோல், பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பது தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு (நெக்) விலைக்கா, அல்லது நிலையான மைனஸ் விலைக்கா என்ற கேள்விக்கும், பெரும்பான்மையான பண்ணையாளர்களின் தேர்வாக, 'நோ மைனஸ் நெக் ரேட்' என்பது பதிலாக கிடைத்தது. முட்டை விற்பனை விலையை அறிவிப்பது, 'நெக்' மட்டுமே செய்யலாம். பிறர் செய்யக்கூடாது அல்லது மற்றவர்களும் செய்யலாம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கும், 'நெக்' மட்டுமே என பதில் கிடைத்தது.
இது குறித்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் (நெக்) நாமக்கல் மண்டல துணை தலைவர் சிங்கராஜ் வெளியிட்ட அறிக்கை:
கருத்து கேட்பு ஓட்டுப்பதிவில், 'நோ மைனஸ் நெக் ரேட்' வேண்டும் என்பதே பெரும்பான்மையான பண்ணையாளர்களின் கருத்தாக இருந்தது. அதேபோல், முட்டை விலை நிர்ணயம், தற்போதுள்ள நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என, பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. 'நோ மைனஸ் நெக் ரேட்' என்று வைக்கும்போது, அவற்றை சிறப்பாக மற்றும் சரிவர நடைமுறைப்படுத்த, தினசரி விலை இருந்தால் தான் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பதால், தினசரி விலையும் நாமக்கல்லில் அமல்படுத்தப்படும்.
வரும் காலங்களில், 'நெக்' மட்டுமே விலை அறிவிப்பு செய்ய வேண்டும். மற்ற அமைப்புகள் விலை அறிவிப்பு செய்ய வேண்டாம். மேலும், வண்டி வாடகை உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி 'நெக்' விலை மற்றும் தினசரி விலை வரும், மே 1 முதல் அமல்படுத்தப்படும். 'நெக்' விலை மற்றும் தினசரி விலையை அமல்படுத்த, 50 லட்சம் கோழிகளுக்கு, ஒரு குழு என்ற வகையில், நாமக்கல் மண்டலத்தில், 16 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் அறிவுரை படி, வரும் காலங்களில் முட்டை விலை மற்றும் கோழி விலை நிர்ணயம் செய்வதுடன், நெக் விலை, 'நோ மைனஸ் நெக் ரேட்' மற்றும் தினசரி விலை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.