திருநெல்வேலி:களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் இரவும் பகலாக ஒரு மாதமாக நடந்து வரும் சினிமா படப்பிடிப்பால் யானைகளின் வழித்தடம், நீர் வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு -முண்டந்துறை புலிகள் சரணாலயம் உள்ளது. தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே மத்தளம்பாறை வனப்பகுதி புலிகள் காப்பகத்தின் கீழ் உள்ளது.
அடர் வனப்பகுதியில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன்மில்லர்' என்ற சினிமா படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடப்பதால் அதற்காக அங்கு கோயில் கோபுரத்துடன் கூடிய கிராமச்சூழல் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள், கால்நடை மேய்ப்பாளர்களை கூட அனுமதிக்காதபகுதியில் தற்போது பெரிய லாரிகளில் கொண்டு வந்து தளவாடப்பொருட்களை இறக்குகின்றனர். மின்சாரத்திற்காக ஜெனரேட்டர்களை இயக்கியும் சக்தி வாய்ந்த மின் விளக்குகளை பயன்படுத்தியும் இரவு, பகலாக சூட்டிங் நடக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் யானைகளின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நடவடிக்கையில்லை
பழைய குற்றாலம் ஒப்பினாங்குளம் செங்குளம் கால்வாய் நீர்வரத்து பகுதியில் படப்பிடிப்புக்காக சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 15க்கும் மேற்பட்ட குளங்களில் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது என ராமநதி ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளர் ராம.உதயசூரியன், புலிகள் காப்பக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். எனினும் படப்பிடிப்பு நிறுத்தப்படாமல் தொடர்கிறது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் யானைகளின் வழித்தடங்கள் பாதிப்பால் யானைகள் இரவில் கூட்டம் கூட்டமாக கடையம் சுற்று வட்டார பகுதிக்கு வந்து செல்கின்றன.
சில தினங்களாக ஒற்றை யானை மட்டும் கானாவூர், கடவக்காடு பகுதியில் சுற்றி திரிகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதி 'ஈகோ சென்சிட்டிவ் ஜோன்' எனப்படுகிறது.
புலிகள் காப்பக பகுதியில் இத்தகைய படப்பிடிப்புகள் நடத்தவோ விலங்குகளுக்கு அதிக சத்தம், மின்வெளிச்சம் ஏற்படுத்தவோ கூடாது என வனவிலங்குகள் சட்டம் உள்ளன. இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்ரியாவிடம் இது குறித்து கேட்க முயற்சித்தபோது அவர் பதில் அளிக்கவில்லை.