நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணியாளர்கள், காவலர்கள், உதவியாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மருத்துவமனை கண்காணிப்பாளர் அறை முன், தரையில் அமர்ந்து துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துாய்மை பணியாளர்களுக்கு, ஒப்பந்தம் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட ஊதியம் முறையாக வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்கள் வளர்மதி, நிர்மலா, பூங்கொடி, சுதா ஆகிய நான்கு பேரை, பழிவாங்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனம் 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு செய்பவர்களை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த, நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டன.