கோவை: வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலை, கல்லுாரிகள் கட்டாயம் உரிய விவரங்களை யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அகில இந்திய கல்விக்கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவில் உயர்கல்வி பயில்கின்றனர். அவ்வாறு, பல்கலை, கல்லுாரிகளில் சேரும் மாணவர்களின் முழு விவரங்களை சேர்க்கையின்போதே, educationindia.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும், மாணவர்களும் இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து, பிரத்யேக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதுகுறித்து, கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், சட்ட பல்கலை, கல்லுாரிகளில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என, அகில இந்திய கல்விக்கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.