உடுமலை:உடுமலை அருகே, வன எல்லை கிராமங்களில் புகுந்த காட்டு யானைக்கூட்டம், நுாற்றுக்கணக்கான தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடும் வறட்சி நிலவுவதால், வன விலங்குகள், உணவு, நீர் தேடி வன எல்லையிலுள்ள கிராமங்களுக்குள் புகுகின்றன.
திருமூர்த்தி நகர், வலையபாளையம் கிராமங்களில், நேற்று முன்தினம், இரு குட்டிகளுடன் கூடிய 10 யானைகள் கொண்ட கூட்டம் தென்னந்தோப்புகளுக்குள் புகுந்தது.
நுாற்றுக்கணக்கான தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி உண்டன.
மலையடிவாரத்தில், 1 கி.மீ., வரையில், 20க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு பயிர்களை உண்டதுடன், சோலார் மின் வேலிகளையும், நீர்ப்பாசன கட்டமைப்புகளையும் சேதப்படுத்தின.
இதையடுத்து, உடுமலை வனத்துறையினர் இப்பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
'வன எல்லை கிராமங்களில் யானைகள் நுழைவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும், அகழி, 'சோலார்' மின் வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குருமலை, மாவடப்பு பகுதியில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.