வீரபாண்டி:பாலியல் வழக்கில் ஆஜராகாததால், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்ட வாலிபரை, 10 ஆண்டுக்கு பின் தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் சுபாஷ், 38. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். 2008ல் அப்பெண், சேலம், சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் படிக்க வந்தார்.
அவரை தொடர்ந்து, சுபாஷூம் சேலம் வந்து சீரகாபாடியில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்தார். இந்நிலையில், அப்பெண் கர்ப்பமடைந்தார். பின் சுபாஷ் அவரை விட்டு விலகினார்.
பெண்ணின் பெற்றோர், ஆட்டையாம்பட்டி போலீசில், 2008ல் புகார் அளித்தனர். சுபாஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜாமினில் வந்த அவர், 2013 முதல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
ஆட்டையாம்பட்டி போலீசார், சீரகாபாடியில் தேடியபோது அவர் தப்பியது தெரிந்தது. 10 ஆண்டாக தேடிய நிலையில், அவர் கேரளாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆட்டையாம்பட்டி எஸ்.ஐ., சிவபிரகாஷ் தலைமையில் தனிப்படையினர், அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.