காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022- - 23 ம் கல்வியாண்டில், 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு 'ப்ரி மெட்ரிக்' மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளது.
இதில், ஆதார் எண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்க இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
அஞ்சல் துறை கீழ் செயல்படும் இந்தியா 'போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க்' வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த முகாம்களை பயன்படுத்தி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் கணக்கு துவங்கி பயன்பெற வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 7,899 மாணவர்களுக்கு, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது.
கடந்த 10 நாட்களாக, பள்ளிகளில் நடத்தப்பட்ட முகாம்களில், 1,427 மாணவர்களுக்கு, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள, 6,472 மாணவர்களுக்கும், நாளை 25ம் தேதிக்குள், ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு துவங்கப்பட வேண்டும். இந்த வாய்ப்பை பெற்றோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.