பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கோவிலை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் 'நோட்டீஸ்' வழங்கியதை கண்டித்து, கோவில் கருவறையில் அமர்ந்து பூசாரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கள்ளிப்பாளையம் ரோட்டில், பழமையான கருப்பராயன், கன்னிமார் கோவில் உள்ளது.
பல ஆண்டு காலமாக உள்ள கோவிலில் பொதுமக்கள் வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் அனுப்பியுள்ள நோட்டீசில், 'அறிவிப்பு கிடைத்த, ஏழு நாட்களுக்குள் கோவிலை அகற்ற வேண்டும். இல்லையெனில், நகராட்சி வாயிலாக அப்புறப்படுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து, பூசாரி சந்திரன், கோவில் கருவறைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பொதுமக்கள், ஹிந்து அமைப்பினரும் திரண்டனர். பஜனை பாடல்களை பாடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பொதுமக்கள் கூறியதாவது:
எல்லை கருப்பராயன், கன்னிமார் கோவில், 40 ஆண்டுகளுக்கு மேலாக மரத்தடியின் கீழே இருந்தது. கோவிலுக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, கோவில் அருகே தனியார் ஒருவரின் லே - அவுட் உள்ளது. லே - அவுட்க்கு செல்ல வழித்தட வசதியை ஏற்படுத்தி தருவதற்காக, வழக்கு தொடர்ந்தார்.
அதில், கோர்ட் உத்தரவிட்டு, கோவிலை அப்புறப்படுத்த கூறியதாக நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள நோட்டீசில் தெரிவித்துள்ளது.
இதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மகாலிங்கபுரம் போலீசார் பேச்சு நடத்தினர். இதையடுத்து, பூசாரி, ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.