புற்றுநோய் எண்ணெய்க்கு கோடிகளில் கமிஷன்: நைஜீரிய மோசடி கும்பல் மும்பையில் சிக்கியது | திண்டுக்கல் செய்திகள்| Commission in crores for cancer oil: Nigerian fraud gang busted in Mumbai | Dinamalar
புற்றுநோய் எண்ணெய்க்கு கோடிகளில் கமிஷன்: நைஜீரிய மோசடி கும்பல் மும்பையில் சிக்கியது
Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | |
Advertisement
 

சென்னை-'புற்றுநோய் தீர்வுக்கான எண்ணெய் கொள்முதல் செய்து கொடுத்தால், பல கோடி ரூபாய் கமிஷன் தொகை கிடைக்கும்' என, ஆசை காட்டி, 33.30 லட்சம் ரூபாய் சுருட்டி, மும்பையில் பதுங்கி இருந்த, நைஜீரிய நாட்டு கும்பலை, சென்னை போலீசார் கைது செய்தனர்.



latest tamil news


நைஜீரியாவை சேர்ந்தவர்கள் சைனாசா, 32, உச்சே ஜான் இமேகா,47, காட்வின் இமானுவேல்,32, ஸ்டான்லி, 32. இவர்கள், மும்பையில் சட்ட விரோதமாக தங்கி, 'ஆன்லைன்' வாயிலாக மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள், பொது மக்களின், 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு, 'linkedin' என்ற இணையதளத்திற்கான 'லிங்க்' அனுப்புவர்.

இதை கிளிக் செய்தால், 'கனடா நாட்டில் செயல்படும், பாரா மெடிக்கல் கம்பெனிக்கு, கேன்சர் நோயை குணப்படுத்தும் எண்ணெய் தேவை. அதற்கான மூல பொருட்களையும் கொள்முதல் செய்து தர வேண்டும். இதனால், உங்களுக்கு பல கோடி ரூபாய் கமிஷன் கிடைக்கும்' என, தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

அந்த, 'லிங்க்'கை கிளிக் செய்த சில நிமிடங்களில், மிகவும் அழகான பெண் ஒருவரின், 'வாட்ஸ் ஆப்' எண்ணில் இருந்து தொடர்பு கொள்வார்.

'நான், கனடாவில் செயல் படும், பாரா மெடிக்கல் கம்பெனியில், 'ஏ' டீமில் பணிபுரிபவர். உங்களுக்கு கேன்சர் எண்ணெய்; அதற்கான மூல பொருட்களை கொள்முதல் செய்ய, ஏதேனும் உதவி தேவையா?' என, 'வாட்ஸ் ஆப்'பில், 'சாட்டிங்' செய்வார்.

'உடனடியாக எங்களுக்கு, 18 லிட்டர் எண்ணெய் தேவை. கனடாவில் 1 லிட்டர், 3.54 லட்சம் ரூபாய். ஆனால், புதுடில்லியில், 1.80 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கிறது' எனக்கூறி, எண்ணெய் கிடைக்கும் இடம், தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்களையும் அனுப்பி வைப்பார்.

கொள்முதல் செய்த எண்ணெயை, மும்பையில் தங்கியுள்ள, எங்கள் கம்பெனியின் தர கட்டுப்பாட்டு அதிகாரியிடம் சமர்ப்பித்து, ஆய்வு செய்ய வேண்டும் என, கூறுவார். தரக்கட்டுப்பாட்டு அதிகாரி என, 'டிப் டாப்' உடை அணிந்த நபரின் படம் மற்றும் மொபைல் போன் எண்ணை அனுப்பி வைப்பார்.

இப்படி, சென்னை கொளத்துாரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, 'வாட்ஸ் ஆப்'பில், 'லிங்க்' அனுப்பி, 33.30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அப்போது, மோசடி கும்பல் மும்பையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 10 நாட்களாக முகாமிட்டு, சைனாசா உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்களை நேற்று சென்னைக்கு அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

மோசடி கும்பல், 'ஏ, பி, சி டீம்' என, செயல்பட்டுள்ளது. 'ஏ' குழுவினர் பொது மக்களுடன், 'வாட்ஸ் ஆப் சாட்டிங்' செய்வர்.





'பி டீம்' குறைந்த விலையில் எண்ணெய் விற்கும் வியாபாரி. 'சி டீம்' தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் போல நடிப்பர்.

எண்ணெய் கொள்முதல் செய்து கொடுக்கும் நபருக்கு, கமிஷனாக பல கோடி ரூபாய் கிடைக்கும் என, ஆசை காட்டுவர்.

இவர்களிடம், ஏதேனும் ஒரு எண்ணெயை விற்பனை செய்து, அதை கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்ட நபர், தரக்கட்டுப்பாட்டு அதிகாரியிடம் சமர்ப்பிக்கும் வரை தொடர்பில் இருப்பர்.

அதன் பின், 'மொபைல் போன் சுவிட்ச் ஆப்' செய்து விடுவர். பொது மக்கள், தங்கள் 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு, சந்தேகத்திற்குரிய எந்த 'லிங்க்' வந்தாலும், 'கிளிக்' செய்ய வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X