புதுக்கோட்டை : ஜெகதாபட்டிணம், கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர், 12 பேரையும், இரண்டு விசைப்படகையும், இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில், இந்திய கடல் எல்லை பகுதியில், நெடுந்தீவு அருகே, மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மாலதி மற்றும் முருகானந்தம் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் சென்ற சிவக்குமார்,42, கலையரசன்(23), லோகேஸ்வரன்,24, சக்தி,25, பிரபு,35, சுந்தரமூர்த்தி,45, முருகானந்தம்,42, பாரதிதாசன்,35, ரவி,25, சசிகுமார்,40, விசாலிங்கம்,46, மயில்ராஜன்,23 உள்ளிட்ட 12 மீனவர்களை கைது செய்தனர்.
இரண்டு படகுகளையும் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
இந்திய கடற்பரப்பில், மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம், தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.