புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு புதிய மேம்பட்ட உடல் பரிசோதனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜிப்மர் மருத்துவமனைக் கண்காணிப்பாளர், அனைத்து துறை தலைவர்களுக்கு அனுப்பிய சுற்றிக்கை:
ஜிப்மரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உடல் பரிசோதனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடம், பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் வசூலிக்கப்படும். அத்தொகையை நிறுவன வருவாய் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
மேலும், நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக, மேம்பட்ட சோதனையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த மேம்பட்ட சோதனைகள் விலை உயர்ந்தவை என்பதால், பயனாளிகளிடம் இருந்து ஓரளவு வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்த சேவைகளை நிலையான முறையில் வழங்க முடியும்.
அடிப்படை பரிசோதனைச் சேவைகள் இலவசமாக தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தம் 63 வகையான நோய்களை கண்டறியும் பரிசோதனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதில், குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.