சூலுார்:தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அனுமதி வழங்க கோரி, அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
விசைத்தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை, தமிழக அரசு 50 சதவீதம் குறைந்தது. முதல், 1,000 யூனிட் வரை இலவச மின்சார சலுகையையும் அளித்தது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த தவணை கேட்டும், மின் கட்டணத்துக்கான அபராத தொகையை ரத்து செய்ய கோரியும், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
அங்கு, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், 'ஒவ்வொரு விசைத்தறி குடோன்களுக்கும் மூன்று முதல் நான்கு மின் கட்டண பில்கள் வந்துள்ளன. அவற்றை தவணை முறையில் கட்ட அனுமதி கேட்டும், அபராத தொகையை ரத்து செய்ய வலியுறுத்தியும் அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளோம்' என்றனர்.