கரூர்,-கரூர் அருகே, மண்மங்கலம் - வாங்கல் சாலை, சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, மண்மங்கலம் பிரிவில் இருந்து, வாங்கல் பகுதிக்கு தார் சாலை செல்கிறது. இந்த வழியே 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். அந்த தார் சாலையில், எல்லமடை பகுதியில், சில மாதங்களுக்கு முன், புதிதாக சிறு பாலம் கட்டப்பட்டு, இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.ஆனால், தரமற்ற சிமென்ட், ஜல்லிகற்கள் கலவையால், இணைப்பு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து, அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.மேலும், நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியில் இருந்து, சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன. இந்த சாலையில், பல இடங்களில் மின்விளக்கு கம்பங்களும் இல்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்கள், தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, மண்மங்கலம் - வாங்கல் சாலையில் எல்லமைடை பகுதியில் சேதமடைந்த, சிறுபாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.