கடலுார்: கடலுாரில், தொழிலாளி உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுாரை சேர்ந்தவர் நவீன்ராஜ், 48; தொழிலாளி. இவர், கடந்த 9.7.2018ம் தேதி, கடலுார் சாலையில் பூண்டியாங்குப்பம் அருகே 'பைக்' கில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ் மோதியதில், நவீன்ராஜ் இறந்தார்.
அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள், இழப்பீடு கேட்டு, கடலுார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 21.1.2021 அன்று, நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் 12 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.
ஆனால் நஷ்டஈடு வழங்காததால் நவீன்ராஜ் பெற்றோர், கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ், விபத்தில் இறந்த நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் 15 லட்சத்து 4 ஆயிரத்து 311 ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அரசு பஸ் ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இருப்பினும் இழப்பீடு வழங்காததால் கடலுார் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் சிவமணி, சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் ஆஜராகினர்.