விருதுநகர் : விருதுநகரில் கலெக்டர் அலுவலக பாலம் அமைப்பதற்கு மண் பரிசோதனை செய்து ஓராண்டு முடிந்து விட்ட நிலையில் இன்னும் கட்டுமான பணிகள் துவங்காத நிலை உள்ளது.
இதனால் தினசரி போக்குவரத்து நெரிசலால் மக்கள், அரசு ஊழியர்கள் அல்லாடுகின்றனர்.விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் நான்கு வழிச்சாலை உள்ளது. இதை கடக்க அரசு ஊழியர்கள், மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பும், சாத்துார் படந்தால் விலக்கு நான்குவழிச்சாலையிலும் பாலம் அமைக்க 2009ல் திட்டமிடப்பட்டது.
அதற்கு பின் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. ஆட்சி மாற்றத்தால் 2021 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஒவ்வொரு குறைதீர் நாள் அன்றும் அதிகளவில் மக்கள் வரும் போது விபத்து அபாயம் ஏற்பட்டு கொண்டே இருந்தது.
இந்நிலையில் 2021ல் தி.மு.க., பொறுப்பேற்றதும் வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சாத்துார் ராமச்சந்திரன் கலெக்டர் அலுவலகம் முன் விரைவில் பாலம் துவங்கப்படும் என தெரிவித்தார். அதன் பின் கடந்த ஆண்டு மார்ச்சில் மண் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இந்நிலையில் டெல்லிக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டன. அடுத்தப்படியாக பால வடிவமைப்பு, திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த 6 மாதமாக பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. குறிப்பாக ஓராண்டு நிறைவு பெற்று விட்ட நிலையில் தற்போது வரை கட்டுமான பணிகள் துவங்காமல் உள்ளனர். எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என எதுவும் தெரியாத சூழல் உள்ளது.
இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்தால் கலெக்டர் அலுவலகம் சென்று வரும் அரசு ஊழியர்கள், மக்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம் வந்து செல்வோர், போலீசார் என பலரும் பயன்பெறுவர். ஆனால் தற்போது நெருக்கடியான சூழல் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தை ஒட்டி உள்ள குடியிருப்புகளில் உள்ளோரும் இதே வழியை தான் பயன்படுத்துகின்றனர்.
இந்த நான்கு வழிச்சாலையை கடந்து செல்வதிலும் லாரிகள், மினிலாரிகள், கார்கள் விதி மீறும் போது பாதசாரிகள் விபத்தை சந்திக்கின்றனர். இப்பணியை துவங்குவதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏன் தாமதம் செய்கிறது என தெரியவில்லை. மக்கள் பிரதிநிதிகளான இரண்டு அமைச்சர்களும் இதில் தலையிட்டு நிரந்த தீர்வு காண வேண்டும்.
தினசரி கலெக்டர் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று வருகிறோம். அதிகளவில் வாகனங்கள் வருவதால் கடப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. பாலம் அமைக்க கோரிக்கை இருந்து வரும் நிலையில் விரைவில் அதற்கான பணிகளை துவங்க வேண்டும்.- ரோகிணி, தனியார் ஊழியர், விருதுநகர்.