நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் துாக்கத் திருவிழாவில், 1,352 குழந்தைகள் துாக்க மரத்தில் ஏற்றப்பட்டு, நேர்ச்சை நிறைவு செய்யப்பட்டது.
தமிழக - கேரள எல்லையிலுள்ள இக்கோவிலில் துாக்கத் திருவிழா, மார்ச், 16ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.
குழந்தை பிறக்க, ஆரோக்யமாக வாழ, பெற்றோர், அம்மனிடம் வேண்டுகின்றனர். அந்த வகையில் இந்தாண்டு துாக்க மரத்தில் ஏற்றுவதற்காக, 1,352 குழந்தைகள் பதிவு செய்திருந்தனர்.
இரு சக்கரம் கொண்ட தேரில், 41 அடி உயரத்தில் இரண்டு மரங்கள் பொருத்தப்பட்டு, அதில் நான்கு துாக்க வில்கள் கட்டப்பட்டிருக்கும்.
இவற்றில், விரதம்இருந்த நபர்கள் நால்வரின் இடுப்பை இணைத்து துணிகளால் கட்டிய பின், நேர்ச்சை குழந்தைகளை அவர்கள் ஏந்தியதும், துாக்க மரம் விண் நோக்கி எழும்பும்.
இந்த தேர், கோவிலை ஒரு முறை வலம் வரும். பின், குழந்தைகள் இறக்கப்பட்டு, கோவில் நடையில் வைத்து புனித நீர் தெளிக்கும் போது, துாக்க நேர்ச்சை நிறைவு பெறும்.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கிய இந்த துாக்க நேர்ச்சை இன்று அதிகாலை நிறைவு பெறுகிறது. பின், ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.