உளுந்துார்பேட்டை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தின.
முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, உளுந்துார்பேட்டை தி.மு.க., - எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் பணி ஆணையை வழங்கினார்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் என கூறியதால், பல்வேறு துறை சார்ந்த பெரிய நிறுவனங்கள் முகாமில் இடம் பெறும் என நம்பி, ஏராளமான பெண்கள், இளைஞர்கள் வந்திருந்தனர்.
முகாமில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பேனரில், 53 நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதில், உளுந்துார்பேட்டை பகுதியில் உள்ள துணிக்கடை, மொபைல் போன் கடை, போட்டோ ஸ்டூடியோ, அறக்கட்டளை உள்ளிட்டவைகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
வேலை வாய்ப்பு முகாம் என அறிவித்து விட்டு, கடைகளுக்கு ஆட்கள் எடுத்ததால், முகாமிற்கு வந்த இளைஞர்கள், இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.