கோபி: பவானி ஆற்றில், தலை, கை, கால்கள் இல்லாமல், அழுகிய நிலையில் ஆண் உடல் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுந்தப்பாடி அருகே பெருந்தலையூர் கிராமம், சிரையாம்பாளையம், பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி எதிரே, பவானி ஆற்றங்கரையில் நேற்று மாலை, 4:00 மணிக்கு சிலர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அழுகிய நிலையில் தலை, கை, கால்கள் இல்லாமல், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல், நிர்வாண நிலையில் ஆற்றில் மிதந்து வந்தது கண்டு, குளித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மோப்பநாய் ஜெர்ரி, தடய அறிவியல் ஆய்வக நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தடயங்களை சேகரித்தனர். கவுந்தப்பாடி போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யாரேனும் முன்விரோதத்தால், இறந்த நபரை அரிவாளால் வெட்டி, கொலை செய்து ஆற்றில் வீசி சென்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இறந்த நபரின் கை, கால் மற்றும் தலை ஆகியவை வேறு எங்கேனும் வீசப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோபி, சத்தியமங்கலம் சப்-டிவிஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், மாயமான ஆண்களின் பட்டியல் விபரங்களை அடிப்படையாக கொண்டு, போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். பெருந்தலையூர் கிராம வி.ஏ.ஓ., பஞ்சநாதன், 59, கொடுத்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.