கரூர்: கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, கரூர் மாவட்டத்தில், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய்வித்து பயிர்கள் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளதால், நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களை, அறுவடை பணிக்கு பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் நெல், வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றை அறுவடை செய்ய, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து, கூலி ஆட்கள் வருகின்றனர். ஆனால், மானாவாரி நிலங்களில் மழையை நம்பி நிலக்கடலை, எள், ஆமணக்கு உள்ளிட்ட எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் அறுவடை பணிக்கு, உள்ளூர் கூலி தொழிலாளிகளை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கிராம பஞ்சாயத்துகளில், நுாறு நாள் வேலை உறுதி திட்ட பணிக்கு, கூலி ஆட்கள் சென்று விடுவதால், எண்ணெய் வித்து பயிர்கள் அறுவடை பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், தான்தோன்றிமலை, கடவூர், தோகைமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டாரங்களில், மானாவரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய்வித்து பயிர்களை அறுவடை செய்ய, கூலி ஆட்கள் வருவதில்லை.
இதனால், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய்வித்து பயிர்கள் முற்றிய நிலையில் காய்ந்துள்ளன. மேலும், கோடை மழை பெய்யும் பட்சத்தில், எண்ணெய் வித்து பயிர்கள் மீண்டும் முளைக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, வெள்ளியணை, உப்பிடமங்கலம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நெற்பயிர்கள் கூட, அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. எனவே, எண்ணெய்வித்து பயிர்களை அறுவடை செய்ய, நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.