விழுப்புரம் : மாஜி சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கில், சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., நேற்று விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி., ஆகிய இருவரும் ஆஜராகினர்.
வழக்கின் விசாரணை அதிகாரியும், சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,யுமான முத்தரசி, விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி, இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
இதனையடுத்து, நீதிபதி புஷ்பராணி, வழக்கின் விசாரணையை, நாளை 29ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.