கிருஷ்ணகிரி: தர்மபுரி, விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காய்கறி பயிர்கள் பெருமளவில் பயிரிடப்படுகிறது. விதைகளை, விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். இதை தவிர்த்து ஆன்லைன் மூலமோ, தனிநபரிடமோ அல்லது விதை விற்பனை உரிமம் பெறாத நிறுவனத்திலோ விதைகளை வாங்க வேண்டாம். இணையவழி மூலமாக வாங்கப்படும் விதைகளினால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கோ அல்லது இழப்பிற்கோ
எவ்வித இழப்பீடும் பெற இயலாது.
தனிநபர்கள் மூலம், நேரடியாக நாற்றுப்பண்ணை மற்றும் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும் விதைகளுக்கு உரிய ரசீது அளிக்கப்படாததால், இவ்விதைகள் நம்பகத்தன்மை இல்லாமல், மறைமுகமாக போலி விதைகளை வியாபாரம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே இதை தவிர்த்து விவசாயிகளும், நாற்றுப் பண்ணை உரிமையாளர்களும் விதை உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து விதைகளை வாங்கும்போது, நாள், விவசாயியின் பெயர், பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை அடங்கிய ரசீதை கையொப்பமிட்டு, தவறாமல் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.