பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டியில், 200-க்கும் மேற்பட்ட புளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். பாப்பாரப்பட்டியில் அரசு சார்பில் குளிர்பதன கிடங்கு அமைக்க, விவசாயிகள் மற்றும் புளி உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து
வந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், பழைய பாப்பாரப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் கூடிய குளிர் பதன கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
இரண்டு தளங்களுடன், 2,000 டன் புளி மூட்டைகள் இருப்பு வைக்கும் வகையில், இந்த கிடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பரிவர்த்தனை கூடம், அலுவலக கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் உள்ளன. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனரும், தனி அலுவலருமான பாலசுப்பிரமணியன், செயலாளர் ரவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி, கிடங்கில் புளி மூட்டைகள் இருப்பு வைக்கும் பணியை ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட புளி வணிகர்கள் சங்க செயலாளர் வினுபாஜ்ராஜ், பாப்பாரப்பட்டி பகுதி புளி வணிகர்கள் சங்க தலைவர் சின்னசாமி மற்றும் அலுவலர்கள், புளி உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.