நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பொது வினியோக திட்டத்திற்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைக்கப்பட்ட உணவுகளை, டி.ஆர்.ஓ., மணிமேகலை, பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், வரும் ஏப்., 1 முதல், ரேஷன் கடைகள் மூலம், கார்டுதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகிக்கப்பட உள்ளது. மேலும், மத்திய அரசு பொது வினியோக திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் மற்றும் பிற நல திட்டங்களுக்கும், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்பு சத்து, ரத்த சோகையை தடுக்கிறது. போலிக் அமிலம் கரு வளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும், வைட்டமின் 'பி 12' நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசி பயன்டுத்துவதால், மனித குலத்திற்கு சிறிய அளவில் தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் மினரல்களால் இயல்பான வளர்ச்சி, நல்ல ஆரோக்கியம், திடமான எதிர்ப்பு சக்தி ஆகியவை கிடைக்கும். அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசியின் முழுமையான பயனை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக நுகர்பொருள் வாணிப கழக, நாமக்கல் மண்டல மேலாளர் யசோதா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.