துாத்துக்குடி:துாத்துக்குடியில், கிராம நிர்வாக அதிகாரி முதல், தாசில்தார் சான்று வரை; பிறப்பு, இறப்பு சான்றிதழ்; போலீஸ் ஸ்டேஷன் ரசீது என எந்த சான்றிதழையும் போலியாக தயார் செய்து வழங்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
துாத்துக்குடி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் வந்தியத்தேவன், 64. இவரது உறவினருக்கு சொந்தமான நிலத்திற்கான கிரைய ஆவணம் தொலைந்து விட்டது.
போலீசில் புகார் செய்து, புதிய ஆவணம் பெறுவதற்காக அதே பகுதியை சேர்ந்த மகாராஜன் என்பவரை அணுகினார்.
அவர், துாத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தில் வசிக்கும் பெருமாள், 54, என்பவரது வீட்டிற்கு வந்தியத்தேவனை அழைத்துச் சென்றார்.
போலீஸ் ஸ்டேஷனில் வழங்கப்படும், புகார் பெற்று தரும் ரசீதை பெருமாள் வழங்கினார். பெருமாள் வீட்டில், அவரது நண்பர்கள் ஐந்து பேர் இருந்தனர்.
அவர்கள், கிராம நிர்வாக அலுவலர், வீட்டு வரி ரசீது, நத்தம் பட்டாக்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், அடங்கல் கணக்கு, தாசில்தார் சான்றிதழ் என, போன்றவற்றை போலியாக தயார் செய்து, போலியான ரப்பர் ஸ்டாம்புகளால் முத்திரை வைத்து சான்றிதழ்கள் தருவது தெரிந்தது, வந்தியத்தேவன் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து, துாத்துக்குடி தென்பாகம் போலீசில், அவர் புகார் செய்தார். பல்வேறு சான்றிதழ்களை கம்ப்யூட்டரில் தயார் செய்து, போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையிட்டு, பலருக்கும் வழங்கிய, 50 - 66 வயது வரையிலான ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, 80க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மகாராஜன், பெருமாள் மற்றும் கம்ப்யூட்டரில் சான்றிதழ் தயாரித்து தந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.