திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே கல் குவாரியில் இருந்து அதிவேகமாக சென்ற லாரி மோதியதில் டூவீலரில் சென்ற தெற்கு ஆறுபுளி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மாதவி 48, டயருக்குள் சிக்கி பலியானார். இதை கண்டித்து கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
இம்மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் ராதாபுரம் சட்டசபை தொகுதிக்குள் உள்ளன. இங்கிருந்து கேரளாவுக்கு அதிக அளவில் பாரங்கற்கள், ஜல்லி கற்கள் லாரிகளில் அனுப்பப்படுகின்றன.
நேற்று காலை 8:00 மணியளவில் சீலாத்திகுளத்தில் இருந்து கற்களை ஏற்றிக் கொண்டு கனரக லாரி முடவன்குளம் நோக்கி சென்றது. அங்குள்ள திருப்பத்தில் டூவீலரில் வந்த மாதவி மீது மோதியதில் அவர் லாரி டயருக்குள் சிக்கி சம்பவயிடத்தில் பலியானார். லாரி டிரைவர் ஜேசுராஜன் 25, கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து சுற்றியுள்ள கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
வள்ளியூர் அருகே அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்த மாதவி திசையன்விளை அருகே ரம்மதாபுரத்தில் இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். இவரது கணவர் சில மாதங்களுக்கு முன் விபத்தில் இறந்தார்.
அடிக்கடி உயிர்ப்பலி
ராதாபுரம், இடிந்தகரை பகுதி கல் குவாரிகளில் இருந்து செல்லும் அதிவேக வாகனங்கள் மோதி அடிக்கடி பலர் உயிரிழப்பது தொடர்கிறது. பள்ளி, அலுவலக நேரம் துவங்கும் காலை 8:00 முதல் 9:30 மணி, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை கனரக வாகனங்கள், கல்குவாரி லாரிகள் இயங்க தடை விதிக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
நேற்று விபத்து ஏற்படுத்திய கல் குவாரி நிறுவன லாரி மோதி ஜன., 21ல் நக்கனேரியில் விவசாயி கண்ணன் 38, பலியானார்.