கரூர்: கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு உள்ளது. அந்த வழியாக, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். அமராவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கும், சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
இந்நிலையில், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, சாலையை, சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.