கரூர்: கரூர்- ஈரோடு மற்றும் கோவை சாலை பிரிவில், போக்குவரத்து சிக்னல் லைட்கள், செயல்படாமல் உள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர்-ஈரோடு மற்றும் கோவை பிரிவு சாலையில் தனியார் நிறுவனங்கள், அரசு பள்ளி கூடங்கள், தனியார் வங்கி தலைமை அலுவலகம், காவலர் குடியிருப்பு போன்றவை உள்ளன.
இதனால், கோவை, ஈரோடு சாலை பிரிவு முனியப்பன் கோவில் பகுதியில், போக்குவரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன், சிக்னல் லைட்டுகள் அமைக்கப்பட்டன. தற்போது, அந்த சிக்னல் லைட்கள் சேதமடைந்துள்ளன. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கரூர் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், சிறிய அளவிலான விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, கரூர் - கோவை மற்றும் ஈரோடு சாலை பிரிவில், சேதமடைந்து,செயல்படாமல் உள்ள போக்குவரத்து சிக்னல் லைட்களை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.