ராஜவாய்க்காலில்
இறைச்சி கழிவுகள்
கரூர் -- சேலம் பழைய சாலை, வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில், வீடுகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரே செல்கிறது. மேலும், வெங்கமேடு பகுதியில், 20க்கும் மேற்பட்ட கோழி, மீன்
இறைச்சி விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளிலிருந்து வெளியேறும் இறைச்சி கழிவுகளை ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, ராஜ வாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, கரூர் மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை
அகற்ற வலியுறுத்தல்
கரூர் அருகே உள்ள திருமாநிலையூர் வழியாக திருச்சி உள்ளிட்ட, பல மாவட்டங்களுக்கு பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. ஆனால், அப்பகுதியில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், அந்த பகுதியில் வாகனங்களில் எளிதாக செல்ல முடியவில்லை. விபத்துகள் ஏற்படுகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயக்கம் காட்டுகின்றனர். விபத்துகளை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துக்கு இடையூறாக, திருமாநிலையூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பயணிகள் நிழற்கூடம்
கட்ட வேண்டும்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், கரூர் நகருக்கு செல்லும் பகுதியில், பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளியணை சாலையில் நிழற்கூடம் இல்லை. பழைய நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும், வெள்ளியணை, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, வெள்ளியணை சாலையில் பயணிகள் நிழற்கூடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மேலும், நிழற்கூடம் முன் அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்த, டிரைவர்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.