உளுந்துார்பேட்டை,:மாடு ஏற்றி சென்ற மினி லாரியை மடக்கி, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, உட்கோட்டம் திருநாவலுார் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் சப் இன்ஸ்பெக்டர் மணிமேகலை. இவர், மார்ச் 24ம் தேதி இரவு 11:00 மணியளவில் கெடிலம் அருகே ஊர்க்காவல் படையை சேர்ந்த மனோகரன் என்பவருடன் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது பண்ருட்டி நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மாடுகளை ஏற்றி சென்றதற்காக டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்ய போவதாக சப் இன்ஸ்பெக்டர் மிரட்டினார்.
வழக்கு பதியாமல் இருக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பின், பேரம் பேசி 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு மாடுகளுடன் மினி லாரியை அனுப்பி வைத்தார்.
இது குறித்து கள்ளக்குறிச்சி எஸ்.பி., மோகன்ராஜிக்கு புகார் சென்றது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் மணிமேகலை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பாண்டியன், திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிமேகலையை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.