திண்டிவனம், : திண்டிவனம் அருகே, கண்டக்டரை தாக்கி, அரசு பஸ்சை சேதப்படுத்திய வழக்கில் பழைய இரும்பு வியாபாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த விழுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி, 36; சென்னையில் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி சென்னை, தாம்பரத்திலிருந்து செஞ்சி நோக்கி சென்ற அரசு பஸ்சில் வந்தார்.
பஸ் திண்டிவனம் அடுத்த தீவனுார் அருகே வந்தபோது, அவரது ஊரான விழுக்கத்தில் பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் கூறினார்.
பஸ் தீவனுார் நிறுத்தத்திற்கு பின் செஞ்சியில் மட்டுமே நிற்கும் என கூறிய கண்டக்டர் தீவனுாரில் கோண்தடபாணியை இறக்கி விட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த கோதண்டபாணி கற்களால் கண்டக்டரை தாக்கினார்.
இதில் கண்டக்டர் படுகாயமடைந்தார். பின், டிரைவரைத் தாக்க கல் எறிந்தபோது, பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமானது.
பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோதண்டபாணியை பிடித்து ரோஷணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 1ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ரகுமான் நேற்று தீர்ப்பளித்தார்.
பொது சொத்துக்களை சேதப்படுத்தி அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய கோதண்டபாணிக்கு ஓராண்டு சிறையும், 18 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.