ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் தமிழக கவர்னர் ரவி, தன் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் நேற்று காலை 8:28 மணிக்கு கோவிலுக்கு வந்த கவர்னர் மற்றும் அவரது மனைவிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
மணவாள மாமுனி சன்னதியில் தரிசனம் செய்து சடகோப ராமானுஜ ஜீயரிடம் அவர்கள் ஆசீர்வாதம் பெற்றனர். பின், ஆண்டாள் கோவிலில் கொடிமரம், லஷ்மி நரசிம்மர் சன்னதி, மூலஸ்தானம் தங்க விமானம், கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் ஆண்டாள், ரெங்கமன்னார், நந்தவனத்தை தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறிய ஆண்டாள் சிலை, கோபுர நினைவு பரிசினை தக்கார் ரவிச்சந்திரன் வழங்கினார். ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர் முத்துராஜா, மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை பார்வையிட்டு வணங்கி, போட்டோ எடுத்துக் கொண்டனர். கவர்னரின் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.