ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகளை, அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
திருவள்ளுவர் மாவட்டம், வீரமங்கலத்தை சேர்ந்தவர் எபிநேஷன், 48; இவர், திருத்தணி அருகே உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்; கடந்த, 21-ல் மருதாலம் கூட்டு சாலையில் பைக்கில் சென்றார்.
அப்போது பின்னால் வந்த மணல் லாரி மோதியதில், துாக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் மூளை சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க, அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து எபிநேஷனின் இதயம், நுரையீரல், சென்னை எம்.ஜி.எம்., மருத்துவமனைக்கும், கல்லீரல், இடதுபுற சிறுநீரகம், ராணிப்பேட்டை சி.எம்.சி., மருத்துவமனைக்கும், வலது புற சிறுநீரகம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த எபிநேசனுக்கு, கலைச்செல்வி என்ற மனைவியும், பால் ஆபிரகாம், கிரேஸ்சன் என இரண்டு மகன்கள், கத்ரின் ரோஸ் என்ற ஒரு மகள் உள்ளார்.