ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில் கோடி தீர்த்தம் மற்றும் பிரசாதத்தை, 'டோர் டெலிவரி' செய்யும் திட்டத்தை தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து தபால் கோட்ட கண்காணிப்பாளர் தீர்த்தாரப்பன் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் உள்ள, 22 தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.
இதில், 22வது கோடி தீர்த்தம், அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய மகிமை கிடைக்கும். இந்த கோடி தீர்த்தத்தை சிலர் சமூக வலைதளம் மூலம் கூடுதல் விலைக்கு விற்பதாகவும், அந்த தீர்த்தம் உண்மையானது தானா எனவும் பக்தர்களிடம் சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் தபால் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை இணைந்து, ஆன்லைனில் (www.tnhrce.gov.in) 100 மில்லி லிட்டர் கோடி தீர்த்தத்தை செம்பில் அடைத்தும், 100 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் படம், விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாத பாக்கெட்டையும் விற்கிறது. தபாலில், 200 கி.மீ.,க்குள் அனுப்ப, 205 ரூபாயும், 201 முதல் 1,000 கி.மீ., வரை, 215 ரூபாயும், 1,000 கி.மீ.,க்கு, 235 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பக்தர்கள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தினால், அவர்கள் முகவரிக்கு பிரசாத பாக்கெட், டோர் டெலிவரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.