ராதாபுரம் : ராதாபுரம் கடற்கரை கிராமங்களில் விசைப் படகுகளுக்கு, மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் கருவாடுகளின் மீதான மக்களின் மோகத்தால் இருமடங்கு விலை உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பிரபலமான கருவாடு சந்தை திசையன்விளையில் உள்ளது. இருதாலுகா பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள், சுற்றுப்புற கிராம மக்கள்,வெளியூர்களில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு இப்பகுதி சந்தையில் கருவாடு வாங்கி அனுப்பி வருகின்றனர்.
திசையன்விளை பகுதியில் தயாராகும் கருவாடுகள் மிதமான உப்பு, சரியான காய்வு, பக்குவம், பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பது, குறைவான விலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக பொது மக்கள் அதிகமாக விரும்பி வாங்கிச்செல்வது வழக்கம். தமிழகத்தில் முக்கிய கடற்கரை பகுதிகளான துாத்துக்குடி, ராமேஸ்வரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ராதாபுரம், திசையன்விளை வியாபாரிகள் தரமான மீன்களை வாங்கி கருவாடுகளை தயார் செய்து சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
விலை 'கிடு கிடு'
தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் திசையன்விளை சந்தையில் கருவாடு விலை உயர்வை எட்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் 100 எண்ணிக்கையிலான சாளை கருவாடுகள் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது அதே எண்ணிக்கை சாளை கருவாடுகள் 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மஞ்சள்பாறை 250 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு இரு மடங்கு விலை உயர்ந்த போதிலும் கருவாடுகளுக்கான கிராக்கி அதிகரித்த வண்ணம் இருக்கிறது.