அருப்புக்கோட்டை : திருச்சுழி அருகே பரளச்சி மேலையூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி அருகே பரளச்சி மேலையூரில் பழமையான விநாயகர் சிலை இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த ஜோதிலிங்க கருப்பசாமி அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ரமேஷ், பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்று கள ஆய்வு செய்தபோது, அந்தச் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமையான முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிலை என தெரிந்தது.
மேலும் அவர்கள் கூறியதாவது: பாண்டியர்களின் திருப்பணியில் உருவானது இந்த சிலை. இரண்டரை அடி உயரம் கொண்ட ஒரு பலகை கல்லில் புடைப்புச் சிலை செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் மழுவும், இடது மேற்கரத்தில் பாசம் என்று ஆயுதத்தையும் தாங்கிய படியும், முன்னிரு கரங்களும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தலையில் மகுடம் தரித்தும், புஜங்களில் ஆபரணங்கள் அணிந்தும், தும்பிக்கையானது மோதகத்துடனும், சிற்பம் முக்கால பாண்டியர்களுக்கு உரித்தான கலை நயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தை பார்க்கும் போது இந்த பகுதியில் பெரிய முற்கால பாண்டியரின் சிவன் கோயில் இருந்திருக்க வேண்டும். அவை கால ஓட்டத்திலோ அல்லது அந்நிய படையெடுப்பிலும் அழிந்து இருக்கலாம், என்றனர்.