திருப்பூர்: ''இந்தியாவில் செம்மையான ஆட்சி நடப்பதற்கு அடையாளமாக, பார்லிமென்டில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது,'' என, காமாட்சிதாச சுவாமி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியிலுள்ள, திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி டில்லியில் புதிய பார்லி., கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பினார். அவர் கூறியதாவது:ஹிந்து தர்மத்தை பின்பற்றும் இந்தியாவின் பெருமை, இன்று உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது.
ஆதீன கர்த்தகர்கள் முன்னிலையில், பார்லிமென்ட் அரங்கில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. அதிகாரம் பொருந்திய பிரதமர், செங்கோல் சகிதமாக வந்து, ஆதீனங்களிடம் தனித்தனியே ஆசிபெற்று, நிறுவியிருக்கிறார்.
நாட்டில் செம்மையான ஆட்சி நடப்பதை உணர்த்தும் வகையில், பார்லிமென்ட் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோலுக்கு, பிரதமர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியதும், 'மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்' என, ஒலித்ததும் மெய்சிலிர்க்க வைத்தது.
இந்தியாவில், செம்மையான ஆட்சி நடக்கிறது என்பதன் அடையாளமாகவும், உலக மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில், பார்லிமென்டில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
'உலகிற்கே வழிகாட்டும் நிகழ்வு'
சிரவையாதீனம் குமரகுருபர சுவாமி கூறியதாவது:
ஆறு ஆதீனங்கள், பிரதமர் மோடியிடம் செங்கோலை எடுத்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அட்சதை துாவி அவருக்கு ஆசி வழங்கினோம். அப்போது, ஓதுவாமூர்த்திகள் கோளறு பதிகம் பாடினர். இது, எட்டு கோடி தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், நம் நாட்டுக்கும் பெருமை.
தமிழகத்திலுள்ள ஆதீ னங்களையும், மடாதிபதிகளையும் அழைத்து, வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தது, தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. இது, உலகிற்கே வழிகாட்டும் நிகழ்ச்சியாக அமைந்து இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
'செங்கோல் வைத்து சிறப்பு சேர்த்த பிரதமர்'
காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி கூறியதாவது:
அனைத்து இன மக்களும் வாழும் நம் நாட்டில், அனைத்து மத பிரார்த்தனைகளுடன், 21 குரு மஹா சன்னிதானங்கள் ஆசி வழங்க, பாரத பிரதமர் கரங்களால், புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் மையப்பகுதியில் செங்கோல் நிறுவப்பட்டது.
ஹிந்துக்கள், தர்ம தேவதையாக பசுவை வழிபடுகின்றனர். தமிழகத்தில் இருந்து, 1947ம் ஆண்டு, திருவாடுதுறை ஆதீனம் தம்புரான் சுவாமிகளால், அப்போதைய பாரத பிரதமர் நேருவின் கைகளில் செங்கோல் வழங்கப்பட்டது.
அது, அருங்காட்சியகம் ஒன்றில், 'கைத்தடி' என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று நம் பாரத பிரதமர் மோடி, நம் மண்ணின் மைந்தர்களால் கட்டப்பட்ட புதிய பார்லிமென்ட்டில் செங்கோலை நிறுவி அதற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.
செங்கோல் முன், பிரதமர், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியது, பெருமிதம் கொள்ளும்படியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும், ஒரே இடத்தில் ஒன்று சேர்வது என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல.
நாட்டில் உள்ள தீமைகள் அழிந்து, நாடு வளம் பெற வேண்டி, அனைத்து குரு மஹா சன்னிதானங்களும் ஒரே இடத்தில் கூடி, வழிபாடுகளை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.